search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் உற்பத்தியாளர்கள்"

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.

    அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி பால் பண்ணை அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பசும்பால் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், எருமை பால் விலையை லிட்டருக்கு 54 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் மாட்டு தீவனங்களை வழங்க வேண்டும்,

    கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

    • சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பல்வேறு தரங்களாக பிரிக்கப்பட்டு ஆவின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆவினுக்கு வழங்கி வந்த பாலை கூடுதல் விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:-

    தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 14½ லட்சம் லிட்டர் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மீதமுள்ள 14½ லட்சம் லிட்டர் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் 43 லட்சம் லிட்டராக இருந்தது.

    பால் கொள்முதல் விலை குறைவு, தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறுவது, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு பணம் வினியோகம் செய்வதில் தாமதம், பாலில் உள்ள கொழுப்பு சத்தை முறையாக ஆய்வு செய்யாமல் குறைவான தொகையை வழங்குவது போன்ற பல்வேறு காரணங்களால்தான் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது.

    தற்போதைய ஒரு நாள் பால் தேவை 29 லட்சம் லிட்டர் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும்.

    ஆவினில் தற்போதுள்ள கட்டமைப்பின்படி ஒரு நாளில் கொள்முதல் செய்யும் 29 லட்சம் லிட்டர் பாலை அன்றைய தினமே பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகிக்கும்போது தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு நாள் தேவையான 29 லட்சம் லிட்டர் பால் தவிர்த்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி மறுநாள் வினியோகத்திற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்தால் மட்டுமே பால் வினியோகத்தில் தாமதத்தை தவிர்க்க முடியும்.

    தற்போது காலை 7.30 மணிக்குதான் ஆவினில் இருந்து பால் வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் 9.30 மணி வரை ஆகி விடுகிறது. இதன்பின்பு பால் முகவர்கள் இந்த பாலை பெற்று சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகிக்கும் போது மிகவும் தாமதமாகி விடுகிறது.

    பால் தாமதமாக வினியோகிக்கும்போது, பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் டப்பாக்களை திரும்ப ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினாலும் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    என்னென்ன காரணங்களுக்காக பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது? என்பதை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை. சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி ஆவின் பால் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது.
    • தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் விவசாயத்து க்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது. இதுவரை அதே விலை தான் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.எனவே பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குகிறது. எனவே அரசு பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 12 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும்.

    கடந்த ஆண்டு வரை அமுல் மற்றும் வேறு மாநில மார்க்கெட்டிங் பெடரேசன்களில் இருந்து கலப்பு தீவனம், 50 கிலோ மூட்டையை 925 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மானியம் போக 725 ரூபாய்க்கு வினியோகிக்க ப்பட்டது.ஆவின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவன மூட்டை விலை 1,070 ரூபாயாகும். இதற்கு மானியம் போக 770 ரூபாய்க்கு வினியோகிக்கப்ப ட்டது. கடந்த ஆண்டு ஒன்றியங்களில் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலப்பு தீவன மானியமாக கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்கி 820 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

    ஆவின் ஒன்றியம், பிற மாநில கூட்டுறவு இணைய ங்களில் இருந்து பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கலப்புத்தீவன விலையை விட ஆவின் இணையத்தின் கலப்பு தீவன விலை கிலோவுக்கு 2.90 ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும்.ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத்தொ கையாக அந்தந்த ஆண்டு வழங்கிய பாலுக்கு லிட்டருக்கு 50 பைசா முதல் 1.50 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. ஆனால் கடந்த 7 ஆண்டு களாக ஊக்கத்தொகை வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் இணையம், மாவட்ட ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நுகர்வோருக்கு குறைத்து வழங்கிய 3 ரூபாயை மானியமாக வழங்க வேண்டும்.அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைக ளுக்கு ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் இணையம், ஆவின் மாவட்ட ஒன்றியங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல 1999 - 2000ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாட்ச் டாக் கமிட்டி அமைத்து இரு அனுபவம் வாய்ந்த நபர்களை நியமனம் செய்தனர்.அதே போன்று மீண்டும் கமிட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.
    • ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஈட்டிய நடப்பாண்டு லாபத்தொகை யிலிருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.99828-ஐ சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் வழங்கப்பட்டது.

    பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (பால்வளம்) இரா.கணேஷ், ஆவின் பொது மேலாளர் ஆர்.சதீஸ் மற்றும் ஆவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை ரூ.31-ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 11-ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

    கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நடுரோட்டில் பாலை கொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இதில் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த கிராமத்தின் பால்பண்ணை தலைவர்கள் சண்முகம், ஞானபிரகாசம், தமிழ், பாண்டி, சின்னச்சாமி, முருகன், விக்கி, அர்ஜுனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    ஆகவே பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரணடனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவர் வாரம் ஒருமுறை வர வேண்டும்.

    50 சதவீதம் கால்நடை தீவன மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களும் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.

    கால்நடை களுக்கு தடை இல்லாமல் விலையில்லா இறப்பு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேபோல் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் வரை பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.

    இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    • பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.

    சேலம்:

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாக சேலம் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்த்தில் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 814 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் தடைபடாமல் இருக்க 28 பேர் கொண்ட சிறப்பு அலுவலர்களை நியமித்து உறுதி செய்யப்பட்டு அனைத்து சங்கங்களிலும் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவராக உள்ள ஆர்.ஆர்.ராஜேந்திரனின் சங்கமான வி.புதுபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆவின் பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரியண்ணனிடம், பொதுமேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாகல்பட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    பால் விற்பனை விலை மற்றும் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமைப்பாலுக்கு 44 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனை பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மேலும் விலையை உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 30 சதவீத விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்காமல் புறக்கணித்தனர்.

    இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பால் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பால் விலையை அரசு உயர்த்தி தராவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி பால் வினியோகத்தை முற்றிலும் நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே ஆவினுக்கு இன்று பால் விநியோகம் செய்தனர். இதனால் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    சேலம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் உள்ளூர் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கி தங்களது போராட்டத்தை தங்களது இரண்டாவது நாள் போராட்டத்தை தொடங்கினர்.

    குறிப்பாக பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 260 பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள்தோறும் 2500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று போராட்டத்தின் காரணமாக 40 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாள் யாரும் பால் ஊற்றாமல் பால் எடுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வரும் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுபற்றி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே இன்று இலவசமாக பால் வினியோகம் செய்தோம். அரசு எங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்.
    • போராட்டம் நீடித்தால் குழந்தைகளுக்கு பால் கிடைக்காது.

    மதுரை

    தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி இன்று முதல் ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக பால் உற்பத்தி யாளர்கள் அறிவித்துள்ளனர்.

    பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளில், பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை இருந்தது. தற்போது மாறி, இன்றைக்கு மக்கள் குடிப்பதற்கு பால் இல்லாத ஒரு அவல நிலை தி.மு.க. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    அம்மாவின் ஆட்சிக்கா லத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் பாலின் தரத்தை குறைத்தும், அதிக அளவில் இருக்கும் பாலுக்கு 12 ரூபாயாக உயர்த்தியும், இரண்டாம் ரகமாக விற்கும் பாலில் கொழுப்பு சத்தை ஒரு சதவீதம் குறைத்ததும், ஆவின் பொருள்களின் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருள்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயன டைய வழிவகை செய்ததும், 50 சதவீதத்திற்கு மேல் முக வர்களுக்கு பால் சப்ளையை குறைத்ததும், முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதலை குறைத்ததால், இதன் கார ணமாக பால் உற்பத்தி யாளர்கள் தனியார் நிறுவ னங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கி இருக்கிறார்கள்.

    இது போன்ற கார ணங்களால் தமிழக முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த பால் உற்பத்தியாளர் அறி விப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    ஆகவே இந்த நிலை தொடர்ந்தால், பச்சிளங் குழந்தைகள் குடிப்பதற்கு கூட பால் இல்லாத நிலை ஏற்படும் என்பதை அரசு அறிந்திருக்கிறதா? என்பது தான் இன்றைய வேதனை யான கேள்வியாக இருக்கிறது.

    ஆவின் பால் தட்டு பாட்டால் மக்கள் கவலையில், துயரத்தில், வேதனையில் இருக்கிறார்கள். தி.மு.க. அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த 11-ந்தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விரைவில் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்தநிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வருகிற 17-ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து குறிப்பிட்டபடி மதுரை மாவட்டத்தில் இன்று (17-ந்தேதி) ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகத்தை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் பணியாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.

    மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் அங்கத்தினராக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1.60 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1.36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு உற்பத்தியா ளர்கள் நலச்சங்கம் முழு அளவில் பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தவிர மதுரையில் உற்பத்தியாளர்களிடம் பேசுவதற்காக, ஆவின் சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் சங்க பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கமாவட்டத்தலைவர் பெரிய கருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பம் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.
    • பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம்.

    குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.

    பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.

    இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    இந்த போராட்டம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.

    தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும்.

    தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது.

    ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை கொடுத்து விடுவோம்.

    பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம்.

    தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பால் ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகிப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

    ×